சென்னையில் நேற்று (25-03-25) சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி உள்ளிட்ட 8 பகுதிகளில் பத்து சவரனுக்கு மேற்பட்ட நகைகள் ஒரே மணி நேரத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அடையாறு காவல் எல்லைக்கு உட்பட்ட ஆறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல, சென்னையில் பல இடங்களில் எட்டுக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் ஒரே நாளில் நடந்தது. இதில், ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு இருவர் சென்னையில் இருந்து விமானத்தில் ஏறி தப்பிக்க முயன்றதும் தெரியவந்தது. அதன்பேரில், உடனடியாக அங்கு சென்ற போலீசார் ஹைதராபாத் செல்லும் விமானத்தில் வைத்து இருவரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் ஜாபர் குலாம் ஹுசைன் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த பொங்கலன்று தாம்பரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு பின்னர் விமானத்தில் தப்பிச் சென்றதும், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாபர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தரமணி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக அவர் கூறிய தகவலின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு அவரை தரமணி பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து ஜாபர் போலீசாரை சுட்டு விட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது திருவான்மியூர் காவல் ஆய்வாளர் தற்காப்பிற்காக ஜாபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், ஜாபர் குலாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசாரின் இந்த என்கவுண்டர் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.