பிரதமர் மோடி திறந்து வைத்த ஸ்ரீரங்கம் ரயில் நிலைய திறப்பு விழாவில் திமுக எம்எல்ஏ – பா.ஜ.க பிரமுகர் இடையே வார்த்தை மோதல்…! ( வீடியோ இணைப்பு)
அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ், இந்தியாவில் உள்ள 508 ரெயில் நிலையங்களை 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வருகின்றன. தெற்கு ரயில்வேயில் 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவற்றில் திருச்சி, ஸ்ரீரங்கம் ரயில் நிலையமும் ஒன்றாகும். இவற்றை டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று( மே 22) திறந்து வைத்தார். இதற்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் பாஜகவினர் அமர்ந்திருந்தனர். ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததும் விழா மேடையில் அமர்ந்திருந்தவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்து பேசினர். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேசுகையில், திருச்சியில் மிகச்சிறந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாஜக பிரமுகர் திருவேங்கடம் திடீரென எழுந்து, பழனியாண்டி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவியுங்கள் என கூறினார். அதற்கு பழனியாண்டி யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும் என தெரிவித்தார். இரு கட்சி நிர்வாகிகள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் அங்கிருந்த அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
Comments are closed.