Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் கண் திறந்து பார்த்ததால் பரபரப்பு…(வீடியோ இணைப்பு)

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கண்ணூத்து அருகே உள்ள பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிநாயக்கர். 23 வயதான இந்த வாலிபர் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் ஆண்டி நாயக்கரை இன்று மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், ஆண்டி நாயக்கர் குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

வீட்டின் அருகே கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவர் அசைவற்ற நிலையில் இருந்ததால் இறந்து விட்டதாக கருதிய நிலையில் அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்து வாலிபரை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தனர். மேலும், துக்க நிகழ்விற்கான காரியங்களையும் துவங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அனைவரின் அழுகுரல் கேட்ட வாலிபர் கண் திறந்து பார்க்கவே அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சிலர் உடல்நிலை நல்லா இருக்கா என கேட்டபோது நன்றாக இருப்பது போல் தலையை ஆட்டியுள்ளார். இதுபற்றிய தகவல் அக்கம் பக்கத்தில் பரவவே அனைவரும் அங்கு திரண்டனர். இதுமட்டுமின்றி சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் வருவாய்துறையினரும் அங்கு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வந்த நிலையில் ஆண்டி நாயக்கர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் உயிருடன் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்