திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகுபாறை பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கிச் செல்கின்றனர். உள் நோயாளியாகவும் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல இன்று( மே 29) மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில் மருத்துவமனை வளாக பின்புற பகுதியில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைப் பார்த்த ஊழியர்கள் பாம்பு…பாம்பு… என்று கூச்சலிட்டனர். பின்னர் அந்த பாம்பு மருத்துவ கழிவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் நவீன கருவிகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு விரைந்து வந்து அங்கு பதுங்கி இருந்த பாம்பை நவீன கருவிகள் உதவியுடன் லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை ஒரு சாக்கு பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் உயிருடன் விடப்பட்டது. இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தை சுற்றி முட்புதர்கள் மற்றும் மருத்துவ கழிவுகள் குவிந்து கிடப்பதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், ஆகவே கழிவு பொருட்களையும், முட்புதர்களையும் அகற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.