‘மாஸ்’ நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் இன்று(26-02-2025) சென்னை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தநிலையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் மீது இளைஞர் ஒருவர் காலணியை தூக்கி வீசினார். நீண்ட நேரமாக விஜய் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அவர், கையில் வைத்திருந்த காலணியை கேட்டின் உள்ளே தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் அவரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்ததாக கூறப்படுகிறது. காலணியை வீசிய பிறகு விஜய் படங்களில் வரும் பன்ச் வசனங்களை அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா நடந்து வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்ட சம்பவம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.