‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற பெயரில் புதிய திட்டம்: ஜன.9ம் தேதி தொடங்கி வைக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜன. 6) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் 20-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பது, முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டம் இது. 50,000 தன்னார்வலர்கள் வீடு, வீடாகச் சென்று குடும்பங்களின் கனவை கேட்டறிய உள்ளனர். தன்னார்வலர்கள் முதலில் படிவத்தை கொடுத்து விடுவார்கள். உங்கள் குடும்பத்தினுடைய கனவாக என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். முத்தாய்ப்பான மூன்று கனவுகளை சொல்லுங்கள் என்று கேட்போம். குடும்பங்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரின் கனவுகளையும் கேட்டறிந்து நிறைவேற்ற உள்ளோம். 2 நாட்களுக்கு பிறகு நிரப்பப்பட்ட படிவத்தை பெற்று பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்வோம். ஜன.9ம் தேதி பொன்னேரியில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜன.11 முதல் “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்ட இணையதளத்தை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.