Rock Fort Times
Online News

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்த போது மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணற்றில் ராட்சத போர்கள் போடப்பட்டு மின் மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குழாய் மூலம் திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் பஞ்சக்கரை கொள்ளிடம் ரயில்வே பாலம் அருகே புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் 6 பேர் பொக்லைன் உதவியுடன் அப்பகுதியில் பள்ளம் தோண்டி குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்த பெரிய மிளகுபாறையை சேர்ந்த செல்வம் என்பவர் மீது திடீரென மண் சரிந்து விழுந்து அமுக்கியது. இதிலிருந்து வெளியே வர முடியாமல் அவர் உயிருக்கு போராடினார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மண் சரிவில் சிக்கியுள்ள செல்வத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் அப்பகுதியில் சரிந்த மண் அகற்றப்பட்டு மீட்பு பணியானது தீவிரமாக நடைபெற்றது. அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும், மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு செல்வத்தை மீட்கும் பணி நடந்தது. சற்று நேரத்துக்கு பிறகு அவரை தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உயிருடன் மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்