Rock Fort Times
Online News

மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி- திருமாவளவன் எம்.பி.தலைமையில் தொண்டர்கள் குவிந்தனர்!

பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் தடை சட்டம், வக்பு திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த சட்டங்கள் நேரடியாக இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள் என்றாலும் கூட இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், அதன் உயிர் நாதமான மதச்சார்பின்மைக்கும் எதிரானது என கூறி அந்த அரசியலமைப்புச் சட்டத்தையும், மதச்சார்பின்மையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்கிற அடிப்படையில் மதச்சார்பின்மையை பாதுகாப்போம் என்கிற மையக்கருத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் இன்று (14-06-2025) பிரம்மாண்ட பேரணி  நடைபெற்றது. டிவிஎஸ் டோல்கேட் அருகே தொடங்கிய பேரணி கல்லுக்குழி, தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை வழியாக திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பேரணிக்கு முன்பாக திருமாவளவன் தலைமையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.பேரணியில் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதை கைவிட வேண்டும், மதவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கும்பல் படுகொலையை பயங்கரவாத குற்றமாக அறிவிக்க வேண்டும், ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும், மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்க வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த பேரணியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றனர். திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட அனைவரும் நீல நிற உடை அணிந்து பேரணியில் பங்கேற்றனர். இதில், மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன், துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னிஅரசு, எஸ் எஸ்.பாலாஜி எம்எல்ஏ, ஷாநவாஸ் எம்எல்ஏ, பனையூர் பாபு எம்.எல்.ஏ, சிதம்பரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் இரா.கிட்டு, திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குரு அன்புச்செல்வன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை மற்றும் மாநில மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், மகளிர் அமைப்புக்கள், இஸ்லாமிய ஜனநாயக பேரவையினர், தொழிலாளர் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்