Rock Fort Times
Online News

திருச்சிக்கு ரயிலில் வந்த பெண் பயணி திடீரென கீழே குதித்ததால் உயிரிழப்பு…- தற்கொலையா? கொலையா? போலீசார் விசாரணை…!

கரூர் மாவட்டம், பெரியகுளத்துப்பாளையம், ஜாமீயா நகரைச் சேர்ந்த ஜேகபூர் மனைவி அஜினாபேகம் (45). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் ஜேகபூரின் தாயார் உயிரிழந்தார். இந்நிலையில், திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில் வசிக்கும் அஜினாபேகத்தின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்க்க வேண்டும் என கணவரிடம் கூறி உள்ளார். இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக தம்பதியர் இருவரும் நேற்று( ஏப்.22) காலை கரூரிலிருந்து ஈரோடு -திருச்சி பயணிகள் ரயிலில் திருச்சி புறப்பட்டனர். ரயில் இன்ஜினிலிருந்து 2 -வது பெட்டியில் பயணித்த இருவருக்கும் இடையே ரயிலிலேயே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த ரயில் பெருகமணிக்கும், குளித்தலைக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது, அஜினாபேகம் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜேகபூர் பயணிகளுடன் சேர்ந்து அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். ஆனால், ரயில் சிறிது தூரம் சென்ற பிறகே நிறுத்தப்பட்டதால், ஜேகபூர் மட்டும் இறங்கி தனது மனைவியை தேடிச் சென்றார். இதற்கிடையே ரயில் 10 நிமிடம் நின்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. ஜேகபூர் மட்டும் தனியாக சென்று மனைவியை தேடிக் கண்டுபிடித்தார். தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த அஜினாபேகத்தை அப்பகுதி மக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்து, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அஜினாபேகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் அஜினாபேகத்தின் உடலை பிரேத பிரசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அஜினாபேகத்தின் உறவினர்கள், ஜேகபூர் தான் ரயிலிலிருந்து அவரை தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறி தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அஜினாபேகத்தின் தாயார் மும்தாஜ்பேகம் அளித்த புகாரின் பேரில் திருச்சி ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து ஓடும் ரயிலில் இருந்து குதித்து அஜினா பேகம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கணவர் கீழே தள்ளிவிட்டு கொலை செய்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்