திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு குளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இன்று( ஜன. 12) அதிகாலை கார் ஒன்று நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வளநாடு போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது 5 பேர் காரில் வந்திருப்பதும், காரில் நாட்டுத்துப்பாக்கி, லைட்டுகள் மற்றும் இறந்த நிலையில் 3 மயில்கள், ஒரு மயில் குஞ்சு இருப்பதை அறிந்து அவர்கள் 5 பேரையும் பிடித்து மணப்பாறை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில், 5 பேரும் மயில்களை நாட்டுத்துப்பாக்கி மூலம் வேட்டையாடி இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கங்காளிப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 28), திருப்பதி (22), அம்மன்குறிச்சி ஆலவயல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25), கருமங்காடு பகுதியைச் சேர்ந்த பரத்குமார் ( 21), சின்னபிச்சம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா (25) ஆகிய 5 பேர் மீதும் வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, கார், டார்ச்லைட், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Comments are closed.