வேலை வழங்கியதில் எந்த தவறும் நடக்கவில்லை, குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்- அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சி மத்திய வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று(அக்.31) நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அதுகுறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை. விசாரணையில் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து காட்டுவோம். தி.மு.க.வை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது அவ்வளவுதான். எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை தி.மு.க.வின் பி டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும். ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், நீக்குவதையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.