தென் கொரியாவின் குமி நகரில் 26-வது ஆசிய தடகளப்போட்டி நடைபெற்று வருகிறது. 343 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து மொத்தம் 59 வீரர்கள், வீராங்கனைகள் ஆசிய தடகள போட்டிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், தடகள போட்டியின் 20 கி.மீ., நடைபோட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் செர்வின் வெண்கலம் வென்று அசத்தி உள்ளார். அவர் போட்டி தூரத்தை 1 மணி நேரம் 21 நிமிடம் 14 விநாடிகளில் கடந்தார். ஆசிய தடகளத்தில் வெண்கலம் வென்ற செர்வினுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. துணை முதல்வர் உதயநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 20 கி.மீ பந்தய நடைப்பயணத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற செர்வின் செபாஸ்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். எங்கள் சர்வதேச மிஷன் பதக்கத் திட்டத்தின் (MIMS) விளையாட்டு வீரரான செர்வினின் சிறந்த சாதனையில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன், எதையும் எட்ட முடியாது என்ற சக்தி வாய்ந்த செய்தி இது. நமது நாட்டிற்கும் நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்ததற்காக வாழ்த்துகள். எதிர்காலத்தில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். உங்கள் இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும் வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகளப் போட்டிகளில், 20 கிமீ நடைபோட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் செர்வின் செபாஸ்டியன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. செர்வின் செபாஸ்டியன் மென்மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று, உலக அளவில் தொடர்ந்து நமது நாட்டிற்குப் பெருமை சேர்க்க, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். இதேபோல பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
Comments are closed.