Rock Fort Times
Online News

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு: ஓடும் பேருந்தின் முன் பாய்ந்து ஆண் தற்கொலை…!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று(03-02-2025) சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தை காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஓட்டினார். அந்தப் பேருந்து, பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென பேருந்து முன் பாய்ந்தார். இதில், பேருந்தின் பின்பக்க சக்கரம் அவரது தலையில் ஏறி, இறங்கியது. உடனே அந்த பேருந்து நிறுத்தப்பட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காக பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.
இதுதொடர்பாக கோ.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ் அளித்த புகாரின் பேரில், தெற்கு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து உயிரிழந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்