உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தார். அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று(11-11-2024) பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சஞ்சீவ் கன்னா அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சஞ்சீவ் கன்னா கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சஞ்சீவ்கன்னா, 1960- ம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை புதுடெல்லி மாடர்ன் ஸ்கூலில் முடித்தார். 1980 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் வளாக சட்ட மையத்தில் சட்டம் பயின்றார். இவரது மாமா உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஹன்ஸ் ராஜ் கன்னா ஆவார்.

Comments are closed.