சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே செந்நீர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். திருமணமான இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. எல்.ஐ.சி ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த வினோத், அதிக பணம் சம்பாதிக்கும் ஆவலில் ஆன்லைன் டிரேடிங்கில் செய்துள்ளார். இதற்காக உறவினர்கள், நண்பர்களிடமிருந்து கடன் பெற்று சுமார் ரூ.ஒரு கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கடன் பிரச்சனையால் வினோத் தவித்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்று கடனை அடைத்தார். இருந்தாலும் ஒரு சிலருக்கு பணம் பாக்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த வினோத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த வாலிபர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.