மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று பேசும் போது, முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதி இன்னும் வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்தை மேற்கோள் காட்டி, சீன ஊடுறுவல் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். ராகுல் காந்தி சீனா தொடர்பாக பேசத் தொடங்கியதும், ஆளும் பாஜக உறுப்பினர்கள் அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தியை பேசவிடவில்லை எனக் கூறி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கை மீது ஏறி நின்று ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், சில எம்பிக்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று காகிதங்களை வீசி அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அமளியில் ஈடுபட்ட எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கொண்டு வந்தார். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் மற்றும் ஹிபி ஈடன், அம்ரிந்தர் ராஜா வாரிங் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.