நடப்போம், நலம் பெறுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டா் நடைபயிற்சி பாதை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் மண்டல கண் மருத்துவவியல் நிலையத்திற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 7 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பொள்ளாச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சீபுரம், பெரம்பலூர், கும்பகோணம், தென்காசி மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற கட்டண படுக்கைகள் அமைக்கப்படும், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கென தனி அறை அமைத்து தரப்படும் என்றாா். ‘நடப்போம் நலம் பெறுவோம்’என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் 8 கிலோமீட்டா் தூரம் நடைபாதை உருவாக்கப்படும். மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை அன்று சுகாதார பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு சுகாதார நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். நடைபயிற்சியின் முடிவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.