திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர்,கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பயிற்சி மருத்துவரின் சகோதரர் திருமணத்திற்காக நேற்று நாகர்கோயில் சென்றனர். திருமணத்தை முடித்துவிட்டு இன்று(06-05-2024) காலை கன்னியாகுமரிக்கு வந்து சூரிய உதயத்தை கண்டு களித்தனர். பிறகு, காலை 10 மணி அளவில் கணபதிபுரம் அருகே லெமூர் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் 9 பேர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை ராட்சத அலை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த மீனவர்கள், பொதுமக்கள் உதவியுடன் கடலில் சிக்கியவர்களை மீட்ட போது, 3 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. மற்றவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர். மற்ற நான்கு பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரவின் சாம், காயத்ரி, சாருகவி, வெங்கடேஷ் மற்றும் தர்சித் ஆகிய 5 பேரின் உடல்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று திருச்சி மருத்துவக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் 5 பேர் ஒரே நேரத்தில் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
Comments are closed.