திருச்சி மாவட்டம், கிளிக்கூடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை கடந்த 2020ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு பிரகாசை, கண்ணனின் உறவினரான கிளிக்கூடு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் சரித்திர பதிவேடு குற்றவாளியான அசோக்குமார் (40) தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.இந்தநிலையில் கிளிக்கூடு கிராமத்தில் கபடி போட்டி நடத்த கிராம மக்கள் கொள்ளிடம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டதாகவும், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கடந்த 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இறந்துபோன கபடி வீரர் பிரகாஷ் நினைவாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கபடி போட்டியை நடத்த முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகள் செய்து வந்தனர். இந்த போட்டியை கிளிக்கூடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் மகன்கள் கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வரும் வேலாயுதம் என்கிற பிரபு (30), சட்டக்கல்வி படித்துவிட்டு பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வரும் சின்னத்தம்பி என்கிற பிரவீன் (27) ஆகியோர் தலைமையேற்று செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ரவுடி அசோக்குமார், தனது தலைமையில் தான் கபடி போட்டி நடத்த வேண்டும் என முடிவு செய்து கடந்த மே 18 ,19 தேதி ஆகிய இரண்டு நாட்கள் கிளிக்கூடு ஊராட்சியில் உள்ள கௌத்தரசநல்லூர் கிராமத்தில் கபடி போட்டி நடத்தியுள்ளார். ஆனால், போட்டியில் மிகக் குறைந்த அணிகளே பங்கேற்றதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன்கள் தலைமையில் திட்டமிட்டபடி கடந்த 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கபடி போட்டி நடைபெற்றதாகவும், அதில் அதிக எண்ணிக்கையிலான அணிகள் பங்கேற்று மிகப் பிரம்மாண்டமாக போட்டிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மே 29ம் தேதி இரவு ரவுடி அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குடிபோதையில் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு முன் நின்று தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.இதனை பாலகிருஷ்ணன், பிரபு , பிரவீன், உள்ளிட்டோர் தட்டிக்கேட்கவே இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் தரப்பினர் அசோக்குமாரை சரமாரியாக அரிவாளால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் அசோக்குமாரை காப்பாற்ற சென்ற புவிஹரனுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த கொலை குறித்து புவிஹரனின் தந்தை பொன்னுச்சாமி அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பாலகிருஷ்ணன், பிரபு, பிரவீன், பாலகிருஷ்ணன் மனைவி கலாராணி, உறவினர் சித்திரை செல்வன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், தலைமறைவாக உள்ள மோகன் சின்ன அப்பு என்கிற பிரகாஷ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed.