கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கம்- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு…!
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களின் நலன்கருதி 14.12.2024 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 12.12.2024 (வியாழக்கிழமை) முதல் 15.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4089 சிறப்பு பேருந்துகள் மூலம் 10,110 நடைகள் இயக்கப்பட உள்ளது.மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்குவதற்கும், அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கியது போல், 150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.