திருச்சி மேலக்கல் கண்டார்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி அதிக அளவு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார் , உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் போலீசார், திருச்சி கிழக்கு வட்ட உணவு பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் சத்தியபாமா மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட குழுவினர், மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர், நேரு தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா 40 கிலோ எடை கொண்ட 85 மூட்டைகளில் 3400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த அரிசி முட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் , அதே பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் மகன் அன்வர் பாட்ஷா என்பவர் ரேஷன் அரிசியை முறைகேடாக வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அன்வர் பாட்சாவை தேடி வருகின்றனர். மேலும், அவருக்கு அதிகளவு ரேஷன் அரிசி கிடைத்தது எப்படி?, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.