அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியிலிருந்து உரிய அனுமதி இன்றி பட்டாசு ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில், திருச்சி மாவட்டத்திலும் போலீசார் பட்டாசு ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சியை அடுத்த மணிகண்டம் பகுதி அளுந்தூர் மாரியம்மன் கோவில் அருகில் மணிகண்டம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை இட்டனர். சோதனையில் 3 லாரிகளிலும் பண்டல், பண்டலாக பட்டாசுகள் அதிக அளவு இருந்தன.
எளிதில் தீப்பற்ற கூடிய அந்த வெடி பொருட்களை எந்தவித பாதுகாப்பு மற்றும் உரிய அனுமதி இன்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் அந்த பட்டாசுகளையும், லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த லாரி டிரைவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.