Rock Fort Times
Online News

எஸ்.ஐ.யின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கிய பாஜ கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது…!

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா தலைமையில் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பம்மம் மேம்பாலம் பகுதியில் போலீசார் வந்த போது, நாகர்கோவில் மாநகராட்சி 12-வது வார்டு பாஜ கவுன்சிலர் வடசேரி வெள்ளாளர் கீழத்தெருவை சேர்ந்த சுனில்குமார் (35), நாகர்கோவில் கீழரத வீதியை சேர்ந்த சுரேஷ் (52), நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பு பகுதியை சேர்ந்த சிவ சிதம்பரம், தோவாளையை சேர்ந்த கார் டிரைவர் விஸ்வா ஆகியோர் அந்த வழியாக வந்த டாரஸ் லாரிகள் மற்றும் வாகனங்களை சிறை பிடித்து தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைபார்த்த இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, எஸ்.ஐ. பெனடிட் மற்றும் போலீசார், போக்குவரத்துக்கு இடையூறு செய்யாதீர்கள் என கூறி அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால், தகராறில் ஈடுபட்டவர்கள் நாங்கள் யார் தெரியுமா? எங்களை எப்படி நீ விரட்டுவாய் என கேட்டு போலீசாருடன் தகராறு செய்தனர். அப்போது சுனில்குமார் திடீரென எஸ்.ஐ. பெனடிட் சீருடையை பிடித்து இழுத்து கன்னத்தில் அடித்து அவதூறாக பேசி உள்ளார். மற்றவர்களும் எஸ்.ஐ. பெனடிட்டை மிரட்டிவிட்டு தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில், கார் டிரைவர் விஸ்வா மட்டும் தப்பி சென்றார். இது குறித்து எஸ்.ஐ. பெனடிட் அளித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கவுன்சிலர் சுனில்குமார், சுரேஷ், சிவ சிதம்பரம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விஸ்வாவை தேடி வருகிறார்கள்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்