Rock Fort Times
Online News

போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது…

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). விவசாயி. இவரது மகன்கள் அஜித்ராஜ்(25), யோகராஜ்(22). அதே பகுதியைச் சேர்ந்தவர் நீதிமோகன். செல்வராஜுக்கும், நீதிமோகனுக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் அஜித்ராஜ், யோகராஜ் மற்றும் நீதிமோகன் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து அஜித்ராஜ், யோகராஜ் ஆகிய இருவரும் திருச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு செல்வராஜ் மற்றும் அவரது மகன்கள் இருவரும் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது எங்கள் மீது போட்ட வழக்கிற்கு நாங்கள் முன்ஜாமீன் பெற்று விட்டோம், முன் ஜாமீன் பெறாமல் வெளியில் இருக்கும் நீதிமோகனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு கேனில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு 3 பேரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் செல்வராஜ் மற்றும் அவரது மகன்கள் மீது தற்கொலைக்கு முயன்றது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்