சென்னை வானகரம் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு (வயது 35). இவர் சென்னையில் உள்ள லாரி கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த மாதம் 23-ந் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு கண்டெய்னர் லாரியில் இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அன்று இரவு சிறுகனூர் அருகே லாரியை நிறுத்திவிட்டு அதன் அருகிலேயே தூங்கினார். காலை எழுந்து லாரியை திருச்சிக்கு ஓட்டிச் சென்றார். பின்னர், லாரியை பார்த்தபோது அதில் 39 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் மாவட்டம் பூம்புகார் நகரைச் சேர்ந்த கருப்புசாமி மகன் முத்து (45 ), கள்ளகுறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (19), சேலம் மாவட்டம் கருமந்துறையைச் சேர்ந்த ஸ்ரீதர் (19) ஆகிய 3 பேரை இன்று சிறுகனூர் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் நித்தின் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட உதிரி பாகங்கள் மீட்கப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.