திருச்சி உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள் தனியா(வயது 25), தமிழ் (29). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே இன்று ( 09.12.2023 ) அதிகாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தஞ்சை மாவட்டம் பூதலூர் அயோத்திபட்டியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் ஓட்டினார்.
இந்நிலையில், பால்பண்ணை ரவுண்டானா அருகே டிப்பர் லாரியை திருநங்கைகள் முந்தி செல்ல முற்பட்டபோது , நிலை தடுமாறி டிப்பர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் , தனியா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த தமிழை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார், டிப்பர் லாரி டிரைவர் மணிமாறன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.