2 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: ஹரியானாவில் பாஜக “ஹாட்ரிக்”, ஜம்மு காஷ்மீரில் காங்.கூட்டணி வெற்றி…!
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் என 2 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்தது.. இதில் ஹரியானாவில் ஏற்கனவே இருமுறை ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா மீண்டும் “ஹாட்ரிக்” வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல, ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த இரு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(08-10-2024) காலை 8 மணி அளவில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணியின் கையே ஓங்கி இருந்தது. போகப் போக ஹரியானாவில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி பாரதிய ஜனதா முன்னிலை பெற்றது. ஆனால், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி தொடக்கம் முதலே முன்னிலை பெற்று வந்தது. தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில் பாஜக 50 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களிலும் பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. இதன்மூலம் ஹரியானாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. பிற்பகல் நிலவரப்படி தேசிய மாநாட்டு கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. 6 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி முன்னிலையில் இருக்கிறது. பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஹரியானாவில் பாரதிய ஜனதா இருமுறை ஆட்சி அமைத்துள்ளது. தற்போது வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

Comments are closed.