திருச்சி வனப்பகுதியில் மரங்களை வெட்டிய 2 பேர் கைது: திமிங்கலத்தின் உமிழ்நீரை வாங்கியவரும் சிக்கினார்…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு சிலர் மரங்களை வெட்டி செல்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா மற்றும் உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்பேரில், மணப்பாறை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் பொய்கைமலை வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு திருட்டுத்தனமாக மரங்களை வெட்டிக் கொண்டிருந்த புத்தாநத்தம் கிராமம் வடக்கு இடையப்பட்டியை சேர்ந்த முனியப்பன் (28) மற்றும் குமாரவாடி கிராமம் சேசலூரை சேர்ந்த முருகேசன் (45) ஆகியோரை கைது செய்து, வெட்டப்பட்ட மரத்துண்டுகளை கைப்பற்றினர். மேலும், முனியப்பனிடம் தீவிர விசாரணை நடத்தியதில், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை சேசலூரை சேர்ந்த தேக்கமலை என்பவரிடம் விற்றதாக கூறினார். இதனடிப்படையில் தேக்கமலை வீட்டை சோதனை செய்ததில் அங்கு சில வன உயிரின மற்றும் வனப்பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. இதனை அவர் வைத்திருந்தது வன உயிரின சட்டப்படி குற்றமாகும். அதன்பேரில் தேக்கமலையும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் மூவரும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments are closed.