Rock Fort Times
Online News

சமயபுரம் மாரியம்மன் கோவில் அன்னதான திட்டத்துக்கு நன்கொடை கொடுப்பவர்களிடம் போலி ரசீது வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஊழியர்கள் டிஸ்மிஸ், ஒருவர் சஸ்பெண்ட், கோவில் நிர்வாகம் அதிரடி…!

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்தக் கோவிலில் அன்னதானத் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த  2024 அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில்  கோவிலில் உள்ள தகவல் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்தக்கூடிய காணிக்கை மற்றும் அன்னதான நன்கொடை ஆகியவற்றில் இலட்சக்கணக்கில் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பக்தர்கள்   காணிக்கையாக செலுத்தும் துலாபாரம், ஆடு,மாடு, கோழி மற்றும் அரிசி, வெல்லம், சர்க்கரை, இன்னும்  காணிக்கையாக செலுத்தும் பொருட்களிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்ற பக்தர் தனக்கு  திருமணம் நடைபெற்றால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்து அன்னதானம் செய்வதாக வேண்டுதல் வைத்துள்ளார். இதற்காக அவர் கோவிலில் உள்ள தகவல் மையத்தில்   அன்னதானத்திற்காக 5001 ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார்.

அப்போது தகவல் மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பிரிண்டிங் மெஷின் ஒர்க் ஆகவில்லை நீங்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் நான் ரசீது தருகிறேன் என கூறியுள்ளார். செல்வராஜ் தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும்  தகவல் மையத்தில் ரசீதை கேட்டுள்ளார். அப்போது அங்குள்ள ஊழியர் பிரிண்டிங் மிஷின் பழுதாகிவிட்டது தங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு ரசீதை அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த செல்வராஜுக்கு, கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்து போலியான ரசீது கொடுத்துள்ளார் அந்த ஊழியர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கோவில் இணை ஆணையர் தகவல் மையத்தில் உள்ள கம்ப்யூட்டரை ஆய்வு செய்தபோது அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கிய பக்தருக்கு போலியாக ரசீது வழங்கியது கண்டறியப்பட்டது. இதுபோல ஏராளமான பக்தர்களிடம் போலி ரசீது வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல, அம்மனை தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை ஊழியர்கள் சிலர் அணுகி பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் அனுமதித்து சம்பாதித்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக கோவில் அறங்காவலர் குழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில்  போலி ரசீது தயாரித்து பக்தர்களிடம் முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு பெண் ஊழியர் மற்றும் ஒரு ஆண் ஊழியர் உட்பட மூன்று பேரில் இருவரை நிரந்தர பணி நீக்கமும், ஒருவரை தற்காலிக பணி நீக்கமும் செய்து சமயபுரம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன் மற்றும் இணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்