சளி, காய்ச்சலுக்கு பயன்படுத்தும் 174 மருந்துகள் தரமற்றவை: தரக்கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!
தற்போது பனியோடு சேர்ந்து மிதமான மழையும் பெய்து வருவதால் பலர் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் மருந்து கடைகளில் வாங்கி உட்கொள்ளும் மாத்திரைகளில் 174 தரமற்றவை, போலி என்பது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளையும் மத்திய, மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. ஆய்வில் தரமற்ற, போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் 1,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளி, கிருமித் தொற்று, ஜீரணமண்டல பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 167 மருந்துகள் தரமற்றதாகவும், 7 மருந்துகள் போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த விவரங்கள் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Comments are closed.