தமிழக மருத்துவத்துறையில் காலியாக உள்ள 121 பணியிடங்கள் 10 நாட்களில் நிரப்பப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!
தமிழகத்தில் இந்திய மருத்துவத் துறையில் (ஆயுஷ்)காலியாக உள்ள 121 பணியிடங்களும் 10 நாட்களில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய (ஏப்ரல் 26) கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம், ஆயுர்வேத கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசுகையில், சித்தா, ஆயுர்வேதம், யோகா, யுனானி, ஹோமியோபதி ஆகிய 5 பிரிவுகளிலும் காலியாக உள்ள 121 இடங்களை நிரப்பும் பணி தற்போது முடிவுற்று சான்றிதழ் சரிபார்ப்பு, தரவரிசைப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் 10 நாட்களில் அந்தப் பணிகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், முதுநிலை படிப்பை நிறைவு செய்த மருத்துவர்களை வட்டார மருத்துவமனைகளில் நியமிப்பதில் கடந்த ஓரிரு மாத காலமாக நிலவி வந்த சட்டச்சிக்கல் முடிவுக்கு வந்திருப்பதால் விரைவில் கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
*
Comments are closed.