Rock Fort Times
Online News

“மார்ச் 6″ அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

கடந்த 1967ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாநிலத்திற்கு நடைபெற்ற  சட்டமன்ற தேர்தலில் மாநிலக் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இது   இந்தியாவில் முதன்முறையாக மாநிலக் கட்சி ஒன்று மாநிலத்தில் ஆட்சி அமைத்தது என்ற சாதனையைப் பெற்றது. இதனையடுத்து பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை மார்ச் 6ம் தேதி (06.03.1967) பொறுப்பேற்றது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. அதாவது மெட்ராஸ்  மாநிலத்தின் முதலமைச்சராக அண்ணா பதவியேற்றார். அப்போதைய ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் அண்ணா மற்றும் பிற அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரது அமைச்சரவையில் நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். அதன் தொடர்ச்சியாக, 1967 ஜூலை 18 அன்று மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஜூலை 18 தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மார்ச் 6 அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள். 1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும், தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஸ்டாலின் அறிக்கையை   அறிவிக்க இருக்கிறேன். திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடலின் 2.0வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன், உங்கள் அனைவரின் ஆதரவோடும்”எனத் தெரிவித்துள்ளார். அதாவது “வளமான தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையில் – தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்” என்ற முன்னெடுப்பைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்