தமிழ்நாடு சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, ஜனவரி 9ம் தேதி தொடங்கிய சட்டபேரவை கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அப்போது, அரசுசார்பில் கொடுக்கப்பட்டிருந்த உரையில் இடம்பெற்றிருந்த சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது, தமிழ்நாடு அமைதி பூங்காவாகதிகழ்கிறது, திராவிட மாடல் ஆகிய வாசகங்களை கவர்னர் வாசிக்கவில்லை.
பின்னர் சபாநாயகர் அப்பாவு, கவர்னர் உரையைமுழுமையாக வாசித்தார். இதன்பிறகு, சபை நிறைவடையும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், கவர்னர் சில வாசகங்களை வாசிக்காமல் தவிர்த்தால், அதை சுட்டிக்காட்டும்வகையில், தமிழக முதல்வர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.,
வர்னருக்கு வரைவு உரையானது, அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு,
அதன்பின்னரே அச்சடிக்கப்பட்டது. அதன்படி, இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநருடைய செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள இயலாதநிலையில் இருந்துவருகின்றன. இருந்தாலும், அரசமைப்பு சட்டத்தின்கீழ் உரையாற்றவந்துள்ள ஆளுநருக்கு, முழுமரியாதை அளிக்கும்வகையில் நாங்கள் நடந்துகொண்டோம். ஆனால், தமிழ்நாடு அரசால் தயாரித்து, ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு,
அச்சிடப்பட்ட உரையை முறையாகவும், முழுமையாகவும் படிக்காதது மிகவும் வருந்ததக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.
ஆகவே சட்டமன்ற பேரவை விதி 17ஐ தளர்த்தி, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் இடம் பெறவேண்டும். அதேபோல அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக, ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். அதன்படி, முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது. இதனால் அதிருப்தி அடைந்த கவர்னர் உடனடியாக சட்டசபையிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். தமிழக சட்டசபையில் கவர்னர் அதிருப்தி அடைந்து பாதியில் வெளியேறியது இதுவே முதல்முறை. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.