Rock Fort Times
Online News

“யார் அந்த சார்? ” எனக் கேட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு…!

சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. எஃப்ஐ ஆர் எப்படி கசிந்தது? என்பது குறித்து அரசு தரப்புக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஆய்வு நடத்தினார். இந்தநிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சார், சார்…என்று ஒருவரிடம் பேசியிருப்பதாகவும், அந்த சார் யார்?, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். அதேவேளை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. அதேபோல திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்