Rock Fort Times
Online News

வாக்குறுதியை நிறைவேற்றாத அமைச்சர் அன்பில் மகேஷ்..!- சர்வீஸ் சாலை அமைக்கும் வரை போராட்டம்.- துவாக்குடி சர்வீஸ் சாலை கூட்டமைப்புக்குழு அறிவிப்பு..!

திருச்சி மாநகரின் நெரிசல் மிகுந்த பகுதியாக பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதி உள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் தொலைவுள்ள இப்பகுதியை கடப்பதற்குள் டூவீலர் மற்றும் கார்களில் செல்பவர்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. அந்த அளவிற்கு காலையில் தொடங்கி இரவு வரை எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, திருச்சி பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். திருவெறும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏவும், தற்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தான் வெற்றி பெற்றால் நிச்சயமாக பழைய பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என தேர்தல் சமயத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் அது குறித்த பணிகளில் தீவிரம் காட்டாததால், சர்வீஸ் சாலை அமைக்கும் வரை போராட்டம் நடத்துவது என துவாக்குடி சர்வீஸ் சாலை கூட்டமைப்பு குழு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அக்குழு உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணியன் தெரிவித்ததாவது., திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பின்படி சாலை பணிகள் துவங்கப்படாத காரணத்தால், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மேலும் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூட்டமைப்பின் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதியதாக பொதுநல வழக்கு ஒன்றும் தொடர்ந்தோம். விசாரணையின் போது ஆஜரான தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், புதுடில்லியில் நடைபெற்ற தமிழ்நாடு திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் என பிரமாண பத்திரம் சமர்ப்பித்தார்கள். அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 13ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பிலும் சர்வீஸ் அமைக்கப்படும் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சர்வீஸ் ரோடு திட்டம் தாமதமின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் விதமாக, திட்டப்பணி நிறைவடையும் வரை ஒவ்வொரு 6 வார காலமும் திட்ட முன்னேற்ற நிலை குறித்த விவரங்களை பிரமாண பத்திரமாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் நேற்று (மார்ச் 6ஆம் தேதி) நடைபெற்ற விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், சர்வீஸ் ரோடு உட்பட மொத்த சாலையின் அகலம் 45 மீட்டர் என்பதற்கு பதிலாக 33 மீட்டர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது பொது மக்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும் விதமாக உள்ளதுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக விபத்துக்கள் ஏற்பட காரணமாகிவிடும். தினந்தோறும் பால்பண்ணை சாலையில் விபத்துகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சர்வீஸ் சாலையை அமைக்கவிடாமல் சில வியாபாரிகள் சங்கம் பண பலத்துடன் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். அமைச்சர் அன்பில் மகேஷுக்கே தெரியாமல் அதிகாரிகள் பல வேலைகளை செய்து வருகிறார்கள். சர்வீஸ் சாலையின் அகலம் குறைக்கப்பட்டது என்பது குறித்து கேட்ட கேள்விக்கு, எனக்கே தெரியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அரசு வரையறுத்துள்ள அகலப்படி பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்கொடுத்து சாலைப்பணிகள் அமைக்கவில்லை என்றால் சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் ” என்றார்.

               ADVERTISEMENT…👇

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்