Rock Fort Times
Online News

மாணவ-மாணவிகள் தற்கொலை அதிகரிப்பு: ” நீட்”தேர்வை ரத்து செய்ய எடப்பாடி பழனிசாமி, தமிழிசை குரல் கொடுக்க வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!

2025 – 26-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான “நீட்” நுழைவுத்தேர்வு நேற்று (04.05.2025) நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று நடந்த நீட் தேர்வின் போது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்த பட்டன் நீக்கப்பட்ட சம்பவம், மாணவி ஒருவருக்கு வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரம், பெண்கள் அணிந்திருந்த தாலி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றிய விவகாரம், தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் முழக்கம் ஆகும். அதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்தநிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு பெற அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உதவ வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கொளத்தூர் பகுதியில், அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சி இன்று (05-05-2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நீட்” தேர்வுக்கு விலக்கு பெற எடப்பாடி பழனிசாமி, தமிழிசை ஆகியோர் அரசுக்கு உதவ வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அதைவிட்டு வேறு ஏதாவது பேசுவது அவர்களின் கையாலாகாத தனத்தைக் காட்டுகிறது. நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்