பாதாள சாக்கடை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல்
- திமுக கவுன்சிலரும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு...! (வீடியோ இணைப்பு)
திருச்சி, காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படாததால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், குடிநீர் தேவைக்கும் மக்கள் தினமும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி கவுன்சிலர் காஜாமலை விஜயிடம் பல முறை முறையிட்டுள்ளனர். அவரும், மாநகராட்சி நிர்வாகத்திடம் கூறி வந்துள்ளார் . ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் இன்று(21-12-2024) காஜாமலை விஜய் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காஜாமலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மாத காலத்திற்குள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காஜாமலை விஜய் திமுக கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திமுக கவுன்சிலரே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.