பிளாஸ்டிக் இல்லாத பேப்பர் கப் அறிமுக நிகழ்ச்சி…
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்பு...
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தனியார் ஹோட்டலில் இன்று ( 30.08.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் பிளாஸ்டிக் தன்மை இல்லாத பேப்பர் கப் அறிமுகப்படுத்தப்பட்டது.
கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோா் பிளாஸ்டிக் தன்மை இல்லாத பேப்பர் கப்பை அறிமுகப்படுத்தினா். அதனை நிா்வாகிகள் பெற்றுக்கொண்டனா். பின்னா் விக்கிரமராஜா பேசியதாவது :
கடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப், இந்த ஆட்சியிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எங்கள் கூட்டமைப்பு சுத்தமான மற்றும் பிளாஸ்டிக் தன்மை இல்லாத பேப்பர் கப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. எளிதில் மக்கும் தன்மை கொண்டது. இந்த கப்பை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோய்களும் வர வாய்ப்பு இருக்காது. இந்த பேப்பர் கப் 120 டிகிரி சூடான தண்ணீரை கூட தாங்கும் தன்மை கொண்டது. தரச் சான்றிதழ் உரிமை பெற்று உற்பத்தி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்ரீதர், பொருளாளர் சதக்கத்துல்லா, மாநகர தலைவர் கண்ணன், திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகிகள், உற்பத்தியாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.