Rock Fort Times
Online News

திருச்சி காவிரி பாலத்தில் விபத்து: மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை உரிமையாளர் பலி…!

ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கோபி (வயது 34). ஸ்ரீரங்கத்தில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வந்தார். இவர் இன்று( ஜூலை 19) காலை ஸ்ரீரங்கத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். காவிரி பாலம் ஓடத்துறை அருகில் வந்தபோது இவருக்கு முன்னால் தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. பஸ்சை பின்தொடர்ந்து சென்ற கோபி, திடீரென்று வலதுபக்கமாக மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு சென்ற ஒரு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கோபி, பஸ் சக்கரத்தில் விழுந்து உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டை வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக காவிரி பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியான கோபிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்