சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது, டிஎன்பிசி தலைவராக சைலேந்திரபாபு நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காதது , சிறையில் நீண்ட காலமாக உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தும் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது என பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது . இந்த நிலையில் இன்று ( 25.10.2023 )சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்று விட்டார்.
இந்தச் சம்பவம் தமிழக முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக தேனாம்பேட்டையை சேர்ந்த வினோத் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதாகி கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.